புனே: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், 212 அரைசதங்களுடன் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக் காலிஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்திய அணியின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 88 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணியின் விராட் கோலி - சுப்மன் கில் கூட்டணி ஆட்டத்தை தொடர்ந்தது. விராட் கோலி வந்த 2வது பந்திலேயே நோ-பால் வீசப்பட, அடுத்தடுத்து கிடைத்த இரு ஃபிரீ ஹிட் வாய்ப்பிலும் பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசி மிரட்டினார்.
இதனை தொடர்ந்து வழக்கம் போல் ரன்களை ஓடி ஓடி எடுக்க தொடங்கினார் விராட் கோலி. இதனிடையே சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ஆட்டத்தை முடித்து கொடுக்கும் பொறுப்பை விராட் கோலி எடுத்து கொண்டார். இவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் ஐயர் கம்பெனி கொடுக்க, இந்திய அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் விராட் கோலி 36 ரன்களை எடுத்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்தார்.

இதன் மூலம் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 212வது அரைசதம் விளாசி தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் காலிஸ் சாதனையை முறியடித்தார்.
இவருக்கு முன் சச்சின் டெண்டுல்கர் 264 அரைசதங்களுடன் முதலிடத்திலும், 217 அரைசதங்களுடன் ரிக்கி பாண்டிங் 2வது இடத்திலும், 216 அரைசதங்களுடன் குமார் சங்கக்காரா 3வது இடத்திலும் உள்ளனர். ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளை விராட் கோலி படைத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.