கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த பயிற்சியின் போது பும்ரா, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூவரும் அடுத்தடுத்து வீசிய 10 பந்துகளில் விராட் கோலி 4 முறை ஆட்டமிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 6 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 2வது இன்னிங்ஸில் டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்திருந்தால், விராட் கோலி அவுட் இல்லை என்பது தெரிய வந்திருக்கும்.

ஆனால் பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டதை கூட அவர் உணரவில்லை. இதனால் டிஆர்எஸ் ரிவ்யூ கூட எடுக்காமல் சோகமாக வெளியேறினார். இதனால் விராட் கோலி மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. சுமார் 9 மாதங்களுக்கு பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பினாலும், பேட்டிங் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையிலும் விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார். இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை கான்பூர் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பிட்சை உருவாக்கி பயிற்சியளித்து வருகிறார்.
இந்த நிலையில் கடினமான பிட்சில் விராட் கோலி, இந்திய அணியின் நட்சத்திர பவுலர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூவரையும் எதிர்கொண்டுள்ளார். ஏனென்றால் விராட் கோலி இடதுகை ஸ்பின்னர்களுக்கு தொடர்ச்சியாக தடுமாறி வருகிறார். இதனை சரி செய்யும் வகையில் 2 ஸ்பின்னர்களையும் எதிர்கொண்டு பயிற்சி செய்தார்.
பும்ரா பவுலிங்கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, முதல் பந்திலேயே கால்களில் அணிந்திருந்த பேடில் பட்டு சென்றுள்ளது. அப்போது பும்ரா, இது நிச்சயம் விக்கெட் தான் என்று கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட விராட் கோலி, அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார். தொடர்ந்து பும்ரா வீசிய பந்துகள் ஏராளமானவை விராட் கோலியின் பேட்டில் அடித்து எட்ஜாகி சென்றது.
அதில் ஒரு பந்து ஷார்ட் லெக் திசையில் சென்று விழுந்த போது, அதுவும் அவுட் என்று பும்ரா கூறினார். இதன்பின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரின் பந்துகளை எதிர்கொண்ட போது விராட் கோலியின் பேட்டில் ஏராளமான எட்ஜ்களாகியுள்ளது. கடைசி நேரத்தில் விராட் கோலி ஒரு முறை போல்டாகியுள்ளார். இதனால் விராட் கோலி சோகத்துடன் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் விராட் கோலி கடினமான பயிற்சியை மேற்கொண்ட போதெல்லாம், அடுத்தடுத்து தரமான கம்பேக்கை கொடுப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.