சென்னை: இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளரான சொரிஃபுல் இஸ்லாம் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேக்கர் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. பாகிஸ்தான் மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தியதன் மூலமாக வங்கதேசம் அணி புதிய வரலாற்றை படைத்தது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி பங்கேற்கவுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்.19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதற்காக வங்கதேசம் அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே வங்கதேசம் அணியில் மொத்தமாக 4 விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணத்திற்காக வங்கதேசம் அணி 4 விக்கெட் கீப்பர்களை அணியில் சேர்த்துள்ளது என்று பலரும் குழம்பியுள்ளனர். அதில் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான சொரிஃபுல் இஸ்லாம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சொரிஃபுல் இஸ்லாமிற்கு காயம் ஏற்பட்டது.
அது விரைவில் குணமடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொரிஃபுல் இஸ்லாம் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தான் விக்கெட் கீப்பராக ஜேக்கர் அலி சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 286 பந்துகளை எதிர்கொண்ட 172 ரன்களை விளாசி இருந்தார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியதே அவரின் தேர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வங்கதேசம் அணியின் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்கி சிறந்த பங்களிப்பை வழங்கியதால், அவரை அப்படியே தொடர வங்கதேசம் அணி நிர்வாகம் விரும்புவது தெரிய வந்துள்ளது.
அதேபோல் ஜேக்கர் அலி போன்ற சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வங்கதேசம் அணியின் பிளேயிங் லெவனுக்குள் வரும் போது, லிட்டன் தாஸ் போன்ற வீரர்கள் மீதான அழுத்தமும் குறையும். ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய பேட்ஸ்மேன் என்பதும் ஜேக்கர் அலிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய மூவரையும் எதிர்த்து வங்கதேசம் அணி பேட்ஸ்மேன்கள் சேப்பாக்கம் பிட்சில் தாக்குப் பிடிப்பது எளிதான விஷயமல்ல. இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால், முதலில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய பேட்ஸ்மேன்கள் அவசியம்.
அதனை சரியாக கணித்தே வங்கதேசம் அணி கடைசி நேரத்தில் வேகப்பந்துவீச்சாளருக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை கொண்டு வந்துள்ளது. ஏனென்றால் லிட்டன் தாஸ், ஷகில் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகியோருடன் ஜேக்கர் அலி விளையாடும் பட்சத்தில் வங்கதேசம் அணியைன் மிடில் ஆர்டர் பேட்டிங் கூடுதல் வலிமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.