மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒத்துவராது என்று கூறியுள்ள பார்த்தீவ் படேல், ரஞ்சி டிராபியில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பவுலிங் பயிற்சி மேற்கொண்டது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2018ஆம் ஆண்டுக்கு பின் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வரவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால், அவர் காயமடைவது அதிகமாகி வந்தது. இதனால் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். அதன்பின் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் பலரும் பவுலிங் செய்ய தொடங்கினார்கள். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ஹர்திக் பாண்டியா திடீரென ரெட் பாலில் பயிற்சியை தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக கம்பீர் புதிய திட்டத்தை தீட்டியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருந்தால், எளிதாக வெற்றிபெற முடியும். இதற்காக கவுதம் கம்பீர் ஹர்திக் பாண்டியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில தகவல் வெளியாகியது. அதற்கேற்ப ஹர்திக் பாண்டியாவும் ரெட் பாலில் பயிற்சியை தொடங்கி, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியா எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுக்கப் போவதில்லை. அவர் பயிற்சியின் போது ஒயிட் பால் இல்லை என்பதால், ரெட் பாலில் பயிற்சியை மேற்கொண்டார். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஹர்திக் பாண்டியாவின் உடல் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் வரை நடக்கும் போட்டிகளுக்கு செட்டாகாது. அவர் இந்திய அணியில் விளையாட பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பாக, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையையும், ஃபிட்னஸையும் நிரூபிக்க வேண்டும். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பப்பட்டால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
ஏனென்றால் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு ஆகிய இரு தரப்பும் ஹர்திக் பாண்டியா ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினால், அவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவார் என்று தெளிவாக கூறிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பு கிடையாது என்று நிரூபணமாகியுள்ளது.