நாக்பூர் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் வியாழக்கிழமை நாக்பூர் நகரில் தொடங்குகிறது. டி20 தொடரை இங்கிலாந்து அணி இழந்ததால் ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறார்கள்.
இந்திய அணியை பொறுத்தவரை கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2023 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தான் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு கடந்த 16 மாதங்களாக எந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

இதனால் இந்த சோகமான வரலாறை மாற்ற வேண்டிய உத்வேகத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இந்த சூழலில் முதல் ஒரு நாள் போட்டியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்குவார்.
துணை கேப்டன் சுப்மன் கில், அவருக்கு ஜோடியாக விளையாடுவார். இந்த நிலையில் மூன்றாவது வீரராக எப்போதும் போல் விராட் கோலி விளையாட கூடும். நான்காவது வீரராக உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில் ஐந்தாவது வீரராக யாரை சேர்ப்பது என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கே எல் ராகுலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமா? இல்லை இடது கை பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
ஒருவேளை இவர்கள் இருவரும் களமிறங்கினால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காது. இந்த நிலையில் ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஏழாவது வீரராக ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் இடம்பெறலாம். இரண்டு பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். எட்டாவது வீரராக வருண் சக்கரவர்த்திக்கும் ஒன்பதாவது வீரராக குல்தீப் யாதவ் அல்லது வாசிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க கூடும்.
பத்தாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கிற்கும், 11 ஆவது வீரராக முகமது சமியும் விளையாடக் கூடும். ஜடேஜா அண்மையில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியின் போது முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் குணமடையவில்லை என்றால் அக்சர் பட்டேலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: 1. ரோகித் சர்மா,2, சுப்மன் கில்,3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, கேஎல் ராகுல்/ரிஷப் பண்ட், 6, ஹர்திக் பாண்டியா,7, ஜடேஜா/அக்சர் பட்டேல், 8, வாசிங்டன் சுந்தர்/குல்தீப், 9, வருண் சக்கரவர்த்தி, 10,முகமது ஷமி, 11, ஆர்ஸ்தீப் சிங்