ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் 70 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி முதல் நாள் முடிவிலே தங்களது பேட்டிங்கை தொடங்கினர்.

அதில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க ரோகித் சர்மா 24 ரன்களில் வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று கில் 23 ரன்கள் எடுத்து வெளியேற விராட் கோலி இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
அவர் 123 பந்துகளை எதிர் கொண்டு 86 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தில் ஒரு 35 ரன்கள் மட்டும் தான் சேர்த்து வெளியேறினார். அப்போது இந்தியா லேசான சரிவை கண்டது.
அப்போது விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் உடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கே எஸ் பரத் 41 ரன்களிலும் அஸ்வின் ஒரு ரன்னில் ரன் அவுட் ஆக ஜடேஜா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 155 பந்துகளை எதிர் கொண்டு 82 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 35 ரன்கள் சேர்க்க இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்துள்ளது. இது இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 175 ரன்கள் அதிகமாகும். இன்னும் இந்திய அணி கூடுதலாக ஒரு 50 ரன்கள் சேர்த்தால் இன்னிங்ஸ் வெற்றியைக் கூட பெறுவதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.