லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது. ஆனால் இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியாமல் போக பந்துவீச்சு மட்டும் காரணமல்ல, ஃபீல்டிங்கில் நிறைய முறை கேட்சுகள் கோட்டை விடப்பட்டதும் முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் ஜெய்ஸ்வால் வரலாற்றிலேயே இல்லாத அளவு ஒரே இன்னிங்ஸில் ஆதிக்க கேட்ச்களை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் என மூன்று வீரர்கள் சதம் அடித்திருந்தனர். இதனால் இந்திய அணி இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், அடுத்ததாக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து அணியும் எளிதாக ரன் சேர்த்தது. இந்திய பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் பும்ரா மட்டுமே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மற்ற பவுலர்கள் மோசமாக சொதப்பி இருந்தனர். பின்னர் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதற்கு இடையே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவித்து வந்தனர்.
இங்கிலாந்து அணி எளிதாக ரன் குவிக்க முக்கிய காரணம், பும்ராவின் பந்துவீச்சில் மட்டும் நான்கு கேட்சுகள் நழுவ விடப்பட்டதுதான். அதிலும் ஜெய்ஸ்வால் மட்டுமே மூன்று கேட்சுகளை நழுவ விட்டார். இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக அறியப்படும் ரவீந்திர ஜடேஜா ஒரு கேட்சை நழுவ விட்டார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் புள்ளிவிவரங்களில், இதுவே ஒரே இன்னிங்ஸில் ஒரு இந்திய வீரரின் பந்துவீச்சில் அதிக கேட்சுகள் நழுவிச் சென்ற நிகழ்வாகும். மேலும், ஒரே ஃபீல்டர் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை கேட்சுகளை நழுவவிட்ட வரலாற்று சொதப்பல் நிகழ்வும் அரங்கேறி இருக்கிறது. ஜெய்ஸ்வால் மூன்று முறை இந்த இன்னிங்ஸில் கேட்சுகளை நழுவவிட்டது ஒரு இந்திய ஃபீல்டர் ஒரே இன்னிங்ஸில் அதிக முறை கேட்சுகளை நழுவவிட்ட நிகழ்வாகும்.
இந்த மோசமான ஃபீல்டிங் சொதப்பல்களால் இங்கிலாந்து அணி எளிதாக 465 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 471 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இந்திய அணியால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. ஒருவேளை இந்திய வீரர்கள் கேட்சுகளை சரியாகப் பிடித்திருந்தால், நிச்சயம் இந்த போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்து வீரர் ஓலி போப் 106 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.