ஐதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஐதராபாத் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பேஸ் பால் அணுகுமுறையுடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால் இந்திய மண்ணில் பேஸ் பால் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் அமைக்கப்பட்டுள்ள பிளாட் பிட்ச்களில் பேஸ் பால் அணுகுமுறையுடன் இங்கிலாந்து அணி வென்றாலும், சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் எப்படி பேஸ் பால் அணுகுமுறையுடன் வெற்றிபெற முடியும் என்ற கேள்வி எழுந்தது. 2013ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடிய 46 டெஸ்ட் போட்டிகளில் 3ல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர்களான முகமது ஷமி மற்றும் விராட் கோலி இருவரும் இல்லாமல் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என்பதால், விராட் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் நிச்சயம் களமிறங்கக் கூடும். அதேபோல் விக்கெட் கீப்பருக்கான ரேஸில் கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் உள்ளனர்.
அதில் அனுபவத்தின் அடிப்படையில் கேஎஸ் பரத் தேர்வு செய்யப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என்று அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேஎஸ் பரத் ஆகியோர் களமிறங்கக் கூடும்.
ஸ்பின்னர்களை பொறுத்தவரை ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சர் படேல் கூட்டணியுடன் களமிறங்கவே இந்திய அணி தீர்மானிக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி முதல்முறையாக விளையாடுகிறது. இதனால் குல்தீப் யாதவ் அதிக வெரைட்டிகளை வைத்திருந்தாலும் காம்பினேஷனை மாற்ற ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி முயற்சிக்காது.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள். ஐதராபாத் மைதானத்தில் காலையில் ஆடப்படும் செஷன்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும். இதனால் இரு அனுபவ வீரர்களுடன் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.