விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் சோயப் பஷீர் பவுலிங்கில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பதிலாக ரஜத் பட்டிதர், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல் இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் லீச் மற்றும் ஆண்டர்சன் ஆகியோருக்கு பதில் சோயப் பஷீர், ஆண்டர்சன் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் இருவரும் அட்டாக்கை தொடங்கினர். இவர்கள் இருவரையும் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் கவனமாக எதிர்கொண்டனர். தேவைகேற்ப பவுண்டரிகளை விளாசிய இவர்கள், முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தது. அப்போது அறிமுக வீரர் சோயப் பஷீர் வீசிய பந்தில் லெக் திசையில் நின்றிருந்த போப்பிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சீனியர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், ஜடேஜா உள்ளிட்டோர் இல்லாத நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் தலையில் தான் அனைத்து பொறுப்புகளும் இருந்தது. ஆனால் அந்த பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல் 14 ரன்களில் விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் கூட ஸ்பின்னர்களை அட்டாக் செய்யாமல் டிஃபென்சி மனநிலையுடன் ரோகித் சர்மா விளையாடினார்.
அறிமுக வீரர் பவுலிங் செய்யும் போது தொடக்கத்திலேயே பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால் ஜெய்ஸ்வால் சில பவுண்டரிகள் விளாசிய போதும், ரோகித் சர்மா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முதல் போட்டியில் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த சூழலில், இன்றைய ஆட்டத்திலும் ரோகித் சர்மா சோபிக்க தவறியுள்ளார். இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.