கட்டாக்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து நீண்ட நாட்களுக்கு பின் தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். அதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் முக்கிய சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.
சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு ரோஹித் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா தனது 32வது ஒருநாள் சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல், சச்சின் டெண்டுல்கரின் சாதனை உட்பட மூன்று புதிய சாதனைகளையும் படைத்துள்ளார்.

30 வயதிற்குப் பிறகு அதிக சர்வதேச சதங்கள் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். தனது 30 வயதிற்குப் பிறகு 36 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா. 30 வயதிற்குப் பிறகு அதிக சர்வதேச சதங்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் முந்தைய சாதனையான 35 சதங்களை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரராக அதிக 50+ ஸ்கோர்கள் என்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 121வது 50+ ஸ்கோரைப் பதிவு செய்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இது ஒரு புதிய மைல்கல்லாகும். சச்சின் டெண்டுல்கர் 120 ஸ்கோர்களுடன் இந்த சாதனை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். அதை ரோஹித் முறியடித்து இருக்கிறார்.
இந்தியாவிற்காக தொடக்க ஆட்டக்காரராக இரண்டாவது அதிக ரன்கள் என்ற சாதனையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் தொடக்க ஆட்டக்காரராக 15,404 ரன்களைக் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 15,335 ரன்கள் சாதனையை முறியடித்துள்ளார். வீரேந்திர சேவாக் 15,758 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் 7 சிக்ஸ் அடித்தார் ரோஹித் சர்மா. அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் மட்டும் மொத்தம் 338 சிக்ஸ் அடித்து உலக அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். கிறிஸ் கெயில் 331 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்.