கட்டாக்: ரோஹித் சர்மா நீண்ட நாட்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 32வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.
கடந்த சில மாதங்களாக ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்றும், அணியில் இருந்து நீக்க வேண்டும், கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. உள்ளூர் போட்டிகளில் கூட அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை அடித்து மிரட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா. 76 பந்துகளில் அவர் சதம் அடித்து இருந்தார். அப்போது ஏழு சிக்ஸ் மற்றும் ஒன்பது ஃபோர் அடித்து இருந்தார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியபோது, துவக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். சுப்மன் கில் 52 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார். விராட் கோலி 5 ரன்களில் ஆட்டம் இழந்து இருந்தார்.
ஆனால் மறுபுறம் ரோஹித் சர்மா இரண்டு மடங்கு வேகத்தில் ரன் குவித்தார். அவர் அடித்த இந்த 76 பந்து சதம் அவரது கிரிக்கெட் வாழ்விலேயே இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது. இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் ரோஹித் சர்மா சதம் அடித்து இருந்தார். அதுவே அவரது அதிவேக ஒருநாள் போட்டி சதமாக உள்ளது.
2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 82 பந்துகளில் அடித்த சதம் இரண்டாவது அதிவேக சதமாக இருந்தது. அதை முறியடித்து இருக்கும் ரோஹித் சர்மா தற்போது 76 பந்துகளில் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு நெத்தியடியாக பதிலளித்து இருக்கிறார்.
இதே போட்டியில் அவர் 30 பந்துகளில் அரை சதத்தை கடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அது அவரது மூன்றாவது அதிவேக அரை சதமாகவும் அமைந்தது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ரோஹித் சர்மா தனது ஃபார்மை மீட்டு இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் இந்தப் போட்டியில் அவர் சதம் அடித்தபோது ஏழு சிக்ஸ் அடித்து இருந்தது தனி சாதனையாகவும் மாறி இருக்கிறது. அதாவது ரோஹித் சர்மா இதுவரை சதம் அடித்தபோது ஏழு சிக்ஸ் அடித்ததில்லை. அதைவிட குறைவான அளவிலேயே சிக்ஸர்களை அடித்து தனது சதத்தை நிறைவு செய்து இருந்தார். தற்போது தனது அதிரடி ஆட்டத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு சென்று இருப்பதையே இது காட்டுகிறது.
பின்னர் 90 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 60, ஸ்ரேயாஸ் ஐயர் 44, அக்சர் படேல் 41* ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை வென்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது.