கட்டாக்: சமீபத்தில் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் குறித்து அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் எரிச்சல் அடைந்து இருந்தார். அது பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள் என கூறி இருக்கிறார்.
மேலும், ரோஹித் சர்மாவின் பார்வையில் இருந்து பார்க்கும்போது அந்த கேள்விகள் அவருக்கு எரிச்சலை அளிக்கலாம். ஆனால் அவர் ரன் சேர்த்தால் மட்டுமே இது போன்ற கேள்விகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், "இது எளிதாக சமாளிக்க கூடிய விஷயம் இல்லை. ரோஹித் சர்மாவின் பார்வையில் இருந்து இதை பார்த்தால் அது அவருக்கு எரிச்சல் அடைய வைக்கும் விஷயம்தான். அவர் இந்த தொடரில் கவனம் செலுத்த விரும்புகிறார். நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறேன், அதை தொடர விரும்புகிறேன் என நினைக்கிறார். இந்த தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் அதிக தன்னம்பிக்கையுடன் விளையாட செல்கிறேன் என ரோஹித் சர்மா நினைத்து ஆட வந்துள்ளார்."
"ஆனால், பலரும் அவரைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். நிச்சயமாக அவரது ஆட்டத்தை பார்ப்பவர்கள் கேள்வி கேட்பார்கள் இது சிக்கலான ஒரு நிலைமை தான். இது போன்ற கேள்விகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. அவர் நன்றாக விளையாடும் போது தான் அவர்கள் கேள்வி கேட்பதை நிறுத்துவார்கள்."
"ஒரு கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா எந்த நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது எளிதான விஷயம் இல்லை. அவர் இந்த தொடரில் ஒரு சதம் அடிக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்." என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் அவர் ஏழு பந்துகளை சந்தித்து இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தால் தன் மீதான விமர்சனங்களை ஓரளவு குறைக்க முடியும்.