IND vs ENG : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இந்த போட்டி குறித்து வெளியாகும் செய்தி ஒன்றொன்றும் பீதியை ஏற்படுத்துகிறது. எப்படி வடிவேலு காமெடியில், எனக்கு எதிரி வேறு எங்குமே இல்லடா! இங்கேயே தான் இருக்கீங்க என்று ஒரு வசனம் வருமோ. அது ரோகித் சர்மாவுக்கு கச்சிதமாக பொருந்தும்.

இந்திய அணியில் ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் முதல் டெஸ்டில் அரை சதம் அடித்த கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா என இருவருமே காயம் காரணமாக அணியில் இல்லை. ஏற்கனவே சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறுகிறார்கள். ரோகித் சர்மா சொந்த மண்ணில் கடந்த நான்கு ஆண்டுகளில் 2 சதம் மட்டும் தான் அடித்திருக்கிறார்.
கில் மற்றும் ஸ்ரேயாஸ் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்கள். இதனால் தான் கடைசி நிமிஷம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இளம் வீரர்கள் மோசமாக விளையாடி வருவதால் அவர்களுடைய நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று கவுண்டமணி சொல்வது போல் பிசிசிஐ விசாகப்பட்டினத்தில் அதிதீவிர சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்திருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கக்கூடிய கருப்பு மண் ஆடுகளத்தில் கலக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முதல் பந்தில் இருந்து ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இது போன்ற சூழலில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏற்கனவே இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் பொளந்து வருவதால் இது போன்ற சூழலில் இங்கிலாந்து தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.மேலும் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி தடுமாறும் நிலையில் விசாகப்பட்டினம் ஆடுகளம் நிச்சயம் இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவினால் அது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு 37 வயது ஆகிவிட்டதால், அவருக்கு ஒரு நாள் டெஸ்ட் டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று கருத்து முன் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அதுவும் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியை தழுவினால் அவருடைய கேப்டன் பதவிற்கு பாதிப்பு ஏற்படும்.
இதனால் பிசிசிஐயில் உள்ள ஒரு சிலர், அவருக்கு ஆப்பு வைக்க களிமண் கலந்த சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கிறதோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரோகித் சர்மா தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க வேண்டும். ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக தப்பித்தால் கூட கேப்டனாக சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரோகித்துக்கு அடுத்த அக்னி பரிட்சை காத்திருக்கிறது.