பிர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் நிலை குறித்து அளித்த தகவல் இங்கிலாந்து அணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தத் தொடரில் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், எந்தெந்தப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்பது கடைசி வரை ஒரு சஸ்பென்ஸாகவே உள்ளது.
கடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. இங்கிலாந்து 371 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற்ற நிலையில், பும்ராவின் பந்துவீச்சு மந்தமானது ரசிகர்களைச் சற்று கவலையில் ஆழ்த்தியது. அதே சமயம் அவர்பணிச்சுமை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டது.

இரண்டாவது டெஸ்டுக்கு ஒரு நாள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் சுப்மன் கில், "ஜஸ்பிரித் பும்ரா விளையாடத் தயாராக இருக்கிறார். 20 விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய மற்றும் ரன் குவிக்கக்கூடிய சரியான அணியை நாங்கள் தேர்வு செய்ய முயல்கிறோம். இன்று பிட்சை கடைசியாகப் பார்த்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று மிகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பும்ராவின் முதுகுப் பிரச்சினையே அவர் முழு தொடரிலும் விளையாடாததற்குக் காரணம். டெஸ்ட் அரங்கில் அறிமுகமானதிலிருந்து அவருக்கு இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டனாக விளையாடியபோது அவருக்கு மீண்டும் முதுகு வலி ஏற்பட்டது. இதனால் மூன்று மாதங்கள் களத்திற்கு வெளியே இருந்த அவர், மிக முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் தவறவிட்டார். பிறகு ஐபிஎல் 2025 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார்.
முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்து இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. முதல் டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரின் சதங்களுடன் இந்தியா 471 ரன்கள் குவித்தாலும், இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து பதிலடி கொடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசிய போதிலும், இந்திய அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியது பின்னடைவாக அமைந்தது. இங்கிலாந்து அணி பென் டக்கெட் 149 ரன்கள் குவித்து, 371 ரன்கள் என்ற பெரிய இலக்கை எளிதாக எட்டி, தொடரில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. பும்ரா பிளேயிங் லெவனில் இருந்தால் அது இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கேப்டன் கில்லின் மறைமுகமான பதில், அணியின் உத்தி மற்றும் இங்கிலாந்தை குழப்ப முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, இந்திய ரசிகர்கள் பும்ராவின் பந்துவீச்சை மீண்டும் களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.