எட்ஜ்பாஸ்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீச போகிறோம்.
வானமும் மேகமூட்டத்துடன் இருப்பதால் முதலில் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். நாங்கள் அணியில் மாற்றம் செய்யலாம் என்று தான் இருந்தோம். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் எங்கள் அணி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இதனால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் பல சூழல் நன்றாக தெரியும்.

எங்கள் அணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றோம். முதல் போட்டியில் சிறப்பாக ரன்களை ஷேஸ் செய்தோம். இந்த தொடருக்கு முதல் டெஸ்ட் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. ஆனால் அது அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது நாங்கள் மீண்டும் புதிதாக தொடங்குகிறோம்.
இந்த வாரம் நல்ல கிரிக்கெட் ஆடுவதில் கவனம் செலுத்துவோம் என்று ஸ்டோக்ஸ் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் கில், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.ஏனென்றால் முதலில் தான் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதாரணமாக இருக்கிறது. போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. எங்கள் அணியில் இன்று மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள். பும்ரா இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால் இந்த டெஸ்ட்டை விட மூன்றாவது டெஸ்ட் தான் பும்ரா எங்களுக்கு தேவைப்படுவார் என்று நினைத்தோம்.
நாங்கள் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் பயன்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் முதல் டெஸ்டில் எங்களுடைய கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை. இதன் காரணமாக பேட்டிங் பலம் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றங்களை செய்து இருக்கின்றோம் என்று கில் கூறினார். தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் தான் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.