மும்பை: இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று மாபெரும் வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். மேலும், இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி எவ்வாறு அழுத்தம் கொடுத்து அவர்களை வேறு மாதிரியாக பேட்டிங் செய்ய வைத்தது என்பது பற்றியும் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இங்கிலாந்து அணி எத்தனை பெரிய இலக்கு நிர்ணயம் செய்தாலும் எட்டுவோம் என பேசி வந்த நிலையில் 608 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயம் செய்து இங்கிலாந்து அணியை அழுத்தத்தில் தள்ளியது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் ஆடும் பாணியை இதன் மூலம் இந்திய அணி மாற்றியதை சுட்டிக் காட்டி இருக்கிறார் சச்சின்.
சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுப் பதிவு
சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவு இதோ:
"இந்த தருணத்தில் முக்கியமான நபராக இருக்கும் சுப்மன் கில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்ததற்குப் பாராட்டுக்கள். ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில்.
இந்திய அணியின் அணுகுமுறை இங்கிலாந்து அணியை இந்த போட்டியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களை வேறு மாதிரியாக விளையாட வைப்பது என்பதாக இருந்தது. இந்த போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் மட்டும்தான் இருக்க வேண்டும் என இந்திய அணி முடிவு செய்தது.
இந்த போட்டியில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இந்திய அணியின் பவுலர்கள் வீசிய லென்த் தான். குறிப்பாக ஆகாஷ் தீப் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். எனது கருத்துப்படி ஜோ ரூட் விக்கெட்டை அவர் வீழ்த்தியதுதான் இந்தத் தொடரின் சிறந்த பந்தாக இருக்கும். முகமது சிராஜ், ஜாண்டி ரோட்ஸ் போலப் பிடித்த கேட்ச்சை நான் ரசித்தேன்," என்று சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் வெற்றி குறித்துப் பதிவிட்டு இருக்கிறார்.
சச்சின் சுட்டிக்காட்டிய சிறப்பம்சங்கள்
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்திருந்தனர். அதைத்தான் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும், கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்தார். அவரது அபாரமான பேட்டிங்கின் காரணமாகவே இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதையும் சச்சின் சுட்டிக்காட்டிப் பாராட்டியிருக்கிறார்.
ஆகாஷ் தீப் இந்த டெஸ்ட் தொடரில் முதன்முறையாக விளையாடிய நிலையில், அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக அவர் மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்தார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு இங்கிலாந்து வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அதைத்தான் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டிப் பாராட்டியிருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களும் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 608 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. அப்போது இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக இங்கிலாந்து அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.