விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணியின் 20 வயதே ஆகும் இளம் ஸ்பின்னரான சோயப் பஷீர் குறித்து அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பில்டப் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் எந்த வீரர் அறிமுகமானாலும் அவரை பற்றி பில்டப் கொடுப்பதில் அந்நாட்டினர் கெட்டிக்காரர்கள். இது இளம் வீரர்களுக்கு மனதளவில் ஊக்கத்தை கொடுக்கும் என்பதால், வழக்கமாக நடப்பது தான். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சோயப் பஷீர் என்ற 20 வயது மட்டுமே ஆகும் வீரர் குறித்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பில்டப் கொடுத்துள்ளார்.

ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் முதன்மை ஸ்பின்னரான ஜாக் லீச் காயம் காரணமாக 2வது இன்னிங்ஸில் குறைந்த ஓவர்களையே வீசினார். இதனால் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டியில் ஜாக் லீச் விளையாடுவது சந்தேகம் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் இளம் வீரர் சோயப் பஷீரை அறிமுகம் செய்ய இங்கிலாந்து அணி முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், ஜாக் லீச் காலில் ஏற்பட்டுள்ள காயம் அவருக்கு விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன். நீண்ட ஓய்வுக்கு பின் இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கினார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜாக் லீச் காயமடைவது ஏமாற்றம் தான். கொஞ்சம் விரக்தியாக இருந்தாலும், இதனை எதிர்கொண்டு ஆக வேண்டும் என்பதை மனதில் வைத்துள்ளோம்.
இதனால் 2வது டெஸ்டில் சோயப் பஷீர் களமிறங்குவார். அவர் நல்ல உயரம் என்பதால், பஷீர் பவுலிங் கொஞ்சம் வியப்பாக உள்ளது. அவரின் ஆக்ஷன் மற்றும் பவுலிங்கை பார்த்த பின், இந்திய மண்ணில் மிகச்சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை வந்தது. அந்த உயரத்தில் இருந்து ஸ்பின் செய்யும் போது சாதாரணமாகவே சிறப்பாக வித்தியாசத்தை கொண்டு வருகிறார்.
அதனால் அவரை தேர்வு செய்யும் போது எந்த யோசனைகளும் இல்லை. ஏனென்றால் அவர் திறமையின் மூலமாகவே எங்களை கவர்ந்துவிட்டார். ஸ்பின் ஆலோசகர்களின் அத்தனை கேள்விகளுக்கு பஷீர் தனது பவுலிங்கில் பதிலளித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். முதல்தர போட்டிகளிலும் குறைவாகவே விளையாடியுள்ளதால், அவரின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.