விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாட வேண்டியதன் தேவையை பற்றி பார்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. 2021ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போதும் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இப்படிதான் வென்றிருந்தது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியது.

ஆனாம் இம்முறை கம்பேக் கொடுக்கும் அளவிற்கு இந்திய அணி வலுமையானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள நிலையில், சீனியர் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் முழுக்க முழுக்க இந்திய அணியின் பேட்டிங் ரோகித் சர்மா நம்பியே உள்ளது.
அதேபோல் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாவின் காயம் இந்திய அணிக்கு தொல்லையை கொடுத்துள்ளது. அஸ்வின் ஒரு பக்கம் பிரஷர் கொடுக்கும் போது, ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பவுலிங் செய்யும் போது ஜடேஜா கொத்து கொத்தாக விக்கெட்டை வீழ்த்தி அசத்துவார். அதேபோல் பேட்டிங்கிலும் சொந்த மண்ணில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய வீரர்.
அவரின் இடத்தை இந்திய அணி நிர்வாகம் யாரை கொண்டு நிரப்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து வீரர்கள் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாடுவதில் கில்லியாக உள்ளனர். ஓலி போப் மற்றும் பென் டக்கெட் இருவரும் மிகச்சிறப்பாக ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாடி வருகின்றனர்.
இதனால் இந்திய ஸ்பின்னர்களுக்கு கூடுதல் சவால் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க இந்திய அணிக்குள் சீனியர் வீரரான குல்தீப் யாதவை ரோகித் சர்மா கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் குல்தீப் யாதவ் மிடில் ஸ்டம்பில் பிட்ச் செய்வார் என்பதால் ரிவர்ஸ் ஸ்வீப் அடிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. அதேபோல் பிட்ச்சான பின்னரே பந்து எந்த பக்கம் திரும்பும் என்பது தெரியும். அதனால் பேஸ் பால் டெக்னிக்கை குல்தீப் யாதவ் மூலமாக முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.