அகமதாபாத்: இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களின் ஃபார்மை நிரூபிக்க தவறினர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா சதமும், விராட் கோலி அரை சதமும் அடித்து இருக்கின்றனர். ஆனாலும், இதுதான் ஃபார்மை மீட்பதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அல்லது சதம் அடித்து விட்டால் போதும், நம்மை விட்டுவிடுவார்கள்.. விமர்சனத்தில் இருந்து தப்பிவிடலாம் என்பதே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் "மைன்ட் வாய்ஸ்" ஆக இருக்குமோ? எனும் அளவுக்கு தான் அவர்களின் செயல்பாடு உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் ரோஹித் சர்மா ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்திருக்கிறார். விராட் கோலி ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்து இருக்கிறார். அவர்களின் பேட்டிங் சராசரி மோசமாகவே உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களின் ஃபார்மை மீட்டு விட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு அல்லது மூன்று முறை அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் ஃபார்மை மீட்டதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இருவரும் தலா ஒரு போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடி இருக்கின்றனர்.
இந்த தொடரில் ரோஹித் சர்மா முதல் போட்டியில் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இரண்டாவது போட்டியில் 119 ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் மீண்டும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்து இருக்கிறார்.
விராட் கோலியைப் பொறுத்தவரை இரண்டாவது போட்டியில் 5 ரன்களும், மூன்றாவது போட்டியில் 52 ரன்களும் எடுத்து இருக்கிறார். இந்தத் தொடருக்கு முன் இருவருமே ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினர். அதிலும் ரன் குவிக்கவில்லை. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களிலும் அவர்கள் ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்களா என ரசிகர்கள் மீண்டும் குழப்பத்திலேயே உள்ளனர்.