லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவம், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களை எரிச்சலூட்டும் வகையில் அமைந்தது. இரு தரப்பினரும் அம்பயரிடம் சென்று இது குறித்து முறையிட்டனர். எனினும், போட்டி நிறுத்தப்படவில்லை.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆடி வந்தனர். ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டி இருந்த நிலையில், திடீரென வண்டுகள் படை எடுத்தன. ஆடுகளம் முழுவதும் கூட்டம் கூட்டமாக அவை அங்கும் இங்கும் சென்றன. அதனால் வீரர்களால் போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை.
அப்போது ஃபீல்டிங் செய்து நின்று இருந்த பும்ராவால் ஆடுகளத்தை சரியாகப் பார்க்க முடியாமல், தன் கண் முன் வந்து சென்ற வண்டுகளைத் தனது கையால் தட்ட முயன்றார். மறுபுறம் பேட்டிங் செய்து கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் உடனடியாக பேட்டிங் செய்வதை நிறுத்திவிட்டு அம்பயரிடம் சென்று, தன்னால் ஆடுகளத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, நிறைய பூச்சிகள் இருக்கின்றன என்று முறையிட்டார்.
எனினும், அம்பயர்கள் போட்டியை தற்காலிகமாக நிறுத்த முன்வரவில்லை. இதை அடுத்து, அந்த வண்டுகள் செல்லும் வரை அனைத்து வீரர்களும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு அவை செல்வதற்காகக் காத்திருந்தனர். இதனால் போட்டி சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை தடைப்பட்டது.
இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. எப்போதும் அதிரடியாக ஆடுவதற்குப் பெயர் போன இங்கிலாந்து அணி 83 ஓவர்களில் வெறும் 251 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணி ஒரு ஓவருக்கு மூன்று ரன்கள் என்ற விகிதத்தில் தான் ரன் சேர்த்து இருந்தது. அந்த அணியில் ஜோ ரூட் 99 ரன்களுடன் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதற்கு முன்னதாக, ஒல்லி போப் 44 ரன்கள், பென் டக்கெட் 23 ரன்கள், ஜாக் கிராவ்லி 18 ரன்கள், ஹாரி புரூக் 11 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்து இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.