மும்பை : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடி வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 499 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் களமிறங்கினார். இதில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதையடுத்து இங்கிலாந்து அணியின் கிராலி - டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 312 வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
அவர்களில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் 2 பேர் தான். இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே 500 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ளனர். அதேபோல் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்களையும் பின்னுக்கு தள்ளி 2வது இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதில், கோடியில் ஒருவரான அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். AshWin என்ற பெயரையும் SpinNer என்ற சொல்லையும் இணைத்தால், வின்னர் என்று வரும். டெஸ்ட் கிரிக்கெட்டில 500 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனை. வாழ்த்துகள் அஸ்வின் என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் பதிவு ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. நீண்ட காலமாக தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஆடிய வீரர்களில் மிகப்பெரிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளதோடு, தமிழ்நாட்டின் பெயரையும் இந்திய அளவில் பதித்துள்ளார். இதனால் ஜாம்பவான் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.