லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி தேவை என்ற நிலையில், பிசிசிஐ மருத்துவக் குழு பும்ராவை விளையாட வைக்கக் கூடாது என ஆலோசனை அளித்துள்ளது.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, பும்ரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்து போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடுவார் என அணி நிர்வாகம் கூறி இருந்தது. அந்தத் திட்டத்தின்படி, முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் விளையாடிய பும்ரா, இரண்டாவது டெஸ்டில் ஓய்வெடுத்தார். நான்காவது டெஸ்டிலும் அவர் பங்கேற்றார். மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்டின்போது, பும்ரா 33 ஓவர்கள் வரை பந்துவீசினார்.
மேலும், அவருக்குக் கணுக்காலில் சிறிய சுளுக்கு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவரது நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு, முதுகுப் பகுதியில் மீண்டும் காயம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் தீப்பின் பிரகாசமான வாய்ப்பு
பும்ரா இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், 28 வயதான ஆகாஷ் தீப்பின் வருகை புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதற்கு முன், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் பும்ராவுக்குப் பதிலாகக் களமிறங்கிய ஆகாஷ் தீப், அந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. தற்போது முழு உடல் தகுதியுடன் அவர் அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் முகமது ஷமி போல பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் சிறந்து விளங்குகிறார். மேலும், புதிய பந்திலும் அதிகமாக ஸ்விங் செய்கிறார். எனவே, அவர் பிளேயிங் லெவனில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்.
இந்தத் தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் விளையாடியுள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மட்டுமே. அவரும் மான்செஸ்டர் டெஸ்டின்போது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டது போல் காணப்பட்டார். இருப்பினும், அவர் ஐந்தாவது டெஸ்டிலும் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஒருவேளை சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்தியா தற்போது 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ள நிலையில், ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.