லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், இளம் படையை வழிநடத்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் அனுபவ வீரர் கே.எல். ராகுலின் பங்களிப்பு இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்டுள்ளது. போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய கே.எல். ராகுல், இந்த வெற்றி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தது. ஜோ ரூட் (105) மற்றும் ஹாரி புரூக் (111) ஆகியோரின் சதங்கள் இங்கிலாந்தின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தன.

ஆனால், கடைசி நாளில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அனல் பறக்கும் பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. குறிப்பாக, சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால், இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த த்ரில் வெற்றிக்குப் பிறகு பேசிய கே.எல். ராகுல், "இந்த வெற்றிதான் எனக்கு எல்லாமே. நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளோம். இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் நீடிக்குமா என்ற பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்தத் தொடரில் இரு அணிகளும் விளையாடிய விதம் பதில் சொல்லியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தொடரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் போராடி 2-2 என தொடரை சமன் செய்தது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம். இது ஒரு டிராவாகத் தோன்றலாம், ஆனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும். இந்திய அணி இனி வெளிநாடுகளில் பல தொடர்களை வெல்லும். இந்த வெற்றிக்கு முழு அணியும் தகுதியானது" என்று கூறினார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இல்லாதது குறித்துப் பேசிய ராகுல், "அவர்கள் இல்லாதது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. இளம் வீரர்கள் என்னிடம் வந்து இங்கிலாந்து சூழல் குறித்து கேட்டபோதுதான், எனது புதிய பொறுப்பை உணர்ந்தேன். எனது அனுபவத்தைப் பயன்படுத்தி இளம் வீரர்களுக்கு வழிகாட்டி, அணிக்காக நிற்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார்.
இளம் கேப்டன் சுப்மன் கில்லைப் பாராட்டிய ராகுல், "சுப்மன் கில் ஒரு அற்புதமான தலைவர். அவர் முன்னணியில் இருந்து அணியை வழிநடத்தினார். வீரர்களுடன் கடினமாக உழைத்துள்ளார். திட்டங்களை செயல்படுத்துவதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் செய்த மாற்றங்கள் எங்களுக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தன. அவர் ஒரு தலைவராக மேலும் வளர்வார். இந்திய டெஸ்ட் அணியை அவர் பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை" என்று புகழாரம் சூட்டினார்.