லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 371 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தும் இந்திய அணி பவுலர்கள் சொதப்பியதால் ஆட்டத்தை இந்திய அணியால் டிரா செய்ய முடியவில்லை. இந்த சூழலில் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.பும்ராவுக்கு ஏற்கனவே உடல் தகுதி பிரச்சனை இருப்பதால், அவரது பணி சுமையை நிர்ணயிக்கும் விதமாக வெறும் மூன்று டெஸ்டில் தான் பங்கேற்பார் என்று கம்பீர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.எனினும் இதற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர்," தற்போது உலக கிரிக்கெட்டில் அனைத்து விதமான கிரிக்கெட் அணியையும் எடுத்துப் பார்த்தால் பும்ரா தான் மிகச்சிறந்த பவுலராக இருக்கின்றார்.
எனவே அவருக்கு ஓய்வு வழங்குவது என்பது மிகவும் கடினமான ஒரு முடிவாக நான் பார்க்கின்றேன். என்னை பொருத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகவும் உயர்ந்தது."
"எனவே இந்த இங்கிலாந்து தொடரை முதன்மையாளராக நினைத்து பும்ரா விளையாட வேண்டும். உதாரணத்திற்கு முன்னாள் தென்னாப்பிரிக்கா பவுலர் ஸ்டெயினை எடுத்துக் கொள்ளுங்கள்.நாங்கள் அவரை டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் பயன்படுத்த மாட்டோம்."
"ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற வெளிநாட்டு தொடர்களில் டெஸ்ட் போட்டிகளில் அவரை பயன்படுத்துவோம். சில சமயம் நியூசிலாந்து மண்ணிலும் தரவரிசை பட்டியலை மனதில் வைத்து ஸ்டெயினை பயன்படுத்துவோம்.எனவே பும்ரா விஷயத்தில் அப்படி ஒரு திட்டத்தை இந்திய அணி தீட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் ஏன் இதை செய்ய தவறிவிட்டார்கள் என்று தெரியவில்லை."
"ஒருவேளை காயத்திலிருந்து அப்போதுதான் அவர் மீண்டும் வந்ததால் ஐபிஎல் தொடரை ஒரு பயிற்சியாக பும்ராவுக்கு பிசிசிஐ வழங்கி இருக்கலாம். ஒருவேளை மருத்துவர்கள் தொடர்ந்து உங்களால் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாட முடியாது என்று சொல்லி இருக்கலாம். உடல் தகுதி விஷயத்தில் மருத்துவர்கள் சொல்வதற்கு தான் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். முடிவில் பும்ரா விஷயத்தில் இந்திய அணி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதில் தான் இருக்கின்றது" என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.