சென்னை : துருவ் ஜுரெல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்படுவதற்கு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தரப்பில் விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், இஷான் கிஷன் உள்ளிட்டோர் காயம் மற்றும் சொந்த காரணங்களுக்காக விலகினர். அதேபோல் ஜடேஜாக் காயம் காரணமாக ஒரு போட்டியில் இருந்து விலகினார்.

இதுமட்டுமல்லாமல் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தரப்பில் ரஜத் பட்டிதர், ஆகாஷ் தீப், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் மற்றும் தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட 5 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ரஞ்சி டிராபி தொடரில் புஜாரா சதங்களாக விளாசிய போதும், இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களை தேர்வு செய்து அணிக்குள் கொண்டு வந்தது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப துருவ் ஜுரெல் தனியாளாக ராஞ்சி டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தார். அதேபோல் தேவ்தத் படிக்கல் அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் தொடரை வென்ற பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தான். நிச்சயம் இப்படியொரு வீரர்களை தேர்வு செய்த அவருக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் துருவ் ஜுரெல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்க தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. 15 முதல்தர போட்டிகளில் மட்டுமே ஆடிய துருவ் ஜுரெல் எப்படி சர்வதேச கிரிக்கெட்டில் சாதிப்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி தரப்பில் பேசுகையில், துருவ் ஜுரெல் மீது அஜித் அகர்கருக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. இந்திய அணி நிர்வாகத்திற்கு, போதிய அனுபவம் இல்லாத வீரரை எப்படி இந்திய அணிக்குள் கொண்டு வர முடியும். முக்கியமான தொடரில் களமிறக்குவது சரியா என்று சந்தேகம் கொண்டனர். ஆனால் அஜித் அகர்கர் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ரஞ்சி டிராபி தொடரில் புஜாரா சிறப்பாக ஆடி வந்தார். இதனால் புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஆலோசனகள் நடந்தன. ஏனென்றால் இந்திய அணி பேட்டிங் லைன் அப்பில் அனுபவ வீரர்கள் இல்லாத நிலை உருவாகியது. ஆனாலும் தேவ்தத் படிக்கலை அணிக்குள் கொண்டு வந்தார். ஏனென்றால் இந்த ரஞ்சி சீசனில் படிக்கல் எளிதாக 150 ரன்களை விளாசி வந்தார். அதேபோல் அனுபவமில்லாத இங்கிலாந்து ஸ்பின்னர்களை நல்ல உயரம் கொண்ட படிக்கலால் அட்டாக் செய்ய முடியும் என்று கணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.