மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதும் உடல் தகுதியில் 100 சதவீதம் பேணி காப்பதில் விராட் கோலி வல்லவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிட்டான கிரிக்கெட் வீரராக விராட் கோலி இருந்து வருகிறார்.
இந்த சூழலில் விராட் கோலிக்கு தற்போது வயது ஆகி வருகிறது. 36 வயதான கோலி, முன்பு போல் பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிப்பதும் கிடையாது. அது மட்டும் இல்லாமல் விராட் கோலிக்கு தற்போது அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அண்மையில் ஜனவரி மாதம் தான் கழுத்தில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறி விராட் கோலி ரஞ்சிப் போட்டியில் விளையாடாமல் சென்றார். இந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் தமக்கு முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு விட்டதாக விராட் கோலி முதல் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, "ஜனவரி மாதம் கழுத்திலும், பிப்ரவரி மாதம் முட்டி காலிலும் கோலிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. நாம் விராட் கோலி இதுபோல் கிரிக்கெட் போட்டிகளை காயம் காரணமாக தவற விட்டு பார்த்ததே கிடையாது. ஆனால் தற்போது நாம் அந்தக் கட்டத்திற்கு வந்து விட்டோம்".
"விராட் கோலி கட்டாக்கில் நடைபெறும் ஒரு நாள் போட்டிக்காவது முழு உடல் தகுதியை பெறுவார் என நாம் நம்புகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன், ரோகித் சர்மாவும் விராட் கோலி மனிதர்கள் தான். அவர்கள் ரோபோ கிடையாது. எனவே சில சமயம் இருவரும் களத்தில் ரன்கள் எடுக்காமல் போகலாம்".
"எப்படி இருந்தாலும் நவீன காலத்தில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்றால் அது இருவரும் தான். மிக விரைவில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இல்லாத இந்திய அணி ஒருநாள் வரும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் சோகமான நாளாக அமையும். எனவே இருவரும் விளையாடுவதை ரசிகர்கள் ஆதரித்து பார்த்து மகிழ வேண்டும்" என்று பீட்டர்சன் கூறியிருக்கிறார்.