சென்னை: இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலிவை பார்த்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், கொஞ்சம் கூட கூச்சமே இல்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறும் கிராலி, ஜடேஜாவை பார்த்து சொந்த சாதனைதான் முக்கியமா என்று பேசலாமா என்று கொந்தளித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்துள்ளது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கேஎல் ராகுல், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 425 ரன்களை குவித்தது. இந்திய அணியை சிறந்த ஆட்டத்தைவிடவும், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சரணடைந்ததே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

டிரா செய்து கொள்ளலாமா என்று பென் ஸ்டோக்ஸ் அவரின் வலது கையை நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு நடந்து வந்தார். ஆனால் ஜடேஜா அதனை ஏற்கவில்லை. பால்கனியில் இருந்த சுப்மன் கில் கொஞ்சம் கூட அசையாமல் இந்திய அணியை விளையாடுவாறு சிக்னல் கொடுத்தார். இதனால் இங்கிலாந்து வீரர்கள் டென்ஷனாகினார்கள். அப்போது ஜடேஜாவிடம் இங்கிலாந்து வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
89 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜாவை பார்த்து ஜாக் கிராலி, உனக்கு சொந்த சாதனைதான் முக்கியமா? ஹாரி ப்ரூக் பந்தை சதமடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பான அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் கொந்தளித்துள்ளார். அதில் அஸ்வின் பேசுகையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் செய்தது அபத்தம் மட்டுமல்லாமல் கிரிமினலான விஷயம்.
ஏன்டா கிராலி.. உன்னை ஒன்னே ஒன்னு கேட்கிறேன்.. இந்த டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறாய்.. இதுவரை ஒரு சதம் கூட வரவில்லை.. சதத்தையே எட்டி நின்றுதான் பார்த்து கொண்டிருக்கிறாய்.. நீ நல்ல பிளேயர் தான்.. ஆனால் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எங்கள் வீரரை பார்த்து, உனக்கு சொந்த சாதனைதான் முக்கியமா என்று கேட்கிறாய்..
2 நாள் பேட்டிங் ஆடி டெஸ்ட் மேட்சை டிரா செய்திருக்கிறார்கள்.. இந்தப் போட்டியை இருவரும் டிரா செய்ததற்கான ஊதியம் அவர்களின் சதம்தான். அந்த சதத்தின் போது கேட்கிறாய்.. உனக்கு சொந்த சாதனை முக்கியமானு.. நீயாக இருந்தால் பேட்டை எடுத்துக் கொண்டு ஓய்வறை சென்றிருப்பாயா.. பென் ஸ்டோக்ஸ் 7 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்..
2 ஆண்டுகளுக்கு பின் சதமடித்துள்ளார்.. இந்திய அணி கொடுத்த பிரஷரிலும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு விளையாடியதால் கிரிக்கெட் கடவுள் பென் ஸ்டோக்ஸ்-க்கு கொடுத்த ஊதியம் இது.. மைல்ஸ்டோனை எட்டும் போது அவரும் வந்து கைகுலுக்க வேண்டும் என்கிறார்.. என்னை பொறுத்தவரை இந்திய அணி 15 ஓவர்களையும் விளையாடி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.