ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மாவை இங்கிலாந்து ரசிகர்கள் கலாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களை விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 11வது சதமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் 8 இன்னிங்ஸ்களாக பேட்டிங்கில் சொதப்பி வந்த ரோகித் சர்மா, சதம் விளாசியதன் மூலமாக தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்ததாக பார்க்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் 4வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 23 ரன்கள் சேர்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 4 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமல்லாமல் 6 சிக்ஸ் அடித்திருந்தால், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 600 சிக்சர்களைன் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்திருக்க முடியும்.
இதனால் ரோகித் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 351 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனை தொடர்ந்து ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆண்டர்சன் பவுலிங்கில் ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் ராஞ்சி மைதானத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் பை-பை ரோகித் சர்மா என்று கைகளால் டாட்டா காட்டினர். சொந்த மண்ணிலேயே கேப்டன் ரோகித் சர்மாவை இங்கிலாந்து ரசிகர்கள் கலாய்த்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்மி ஆர்மி என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகர்கள் தான் ரோகித் சர்மா கலாய்த்தது தெரிய வந்தது. இந்த வீடியோவை பார்மி ஆர்மி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் பலரும் இங்கிலாந்து வீரர்களையும், பார்மி ஆர்மிக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.