தரம்சாலா : இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஊதியத்தை அதிகரித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மை காலங்களில் வளர்ந்து வரும் டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சியால் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இளம் வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வளவு ஏன், இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் கூட ரஞ்சி டிராபி சீசனில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. இதனால் இவர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது.

ஜனவரி மாதம் வந்தாலே ஐபிஎல் தொடரை மனதில் வைத்து இளம் வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கிவிடுகிறார்கள். இதனால் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. அதனை அதிகரிக்கும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்களுக்கு ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
புதிய அறிவிப்பின் படி, ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டி நடக்கிறது என்றால், 50 சதவிகித போட்டிக்கும் குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படாது. அதாவது 9 டெஸ்ட் போட்டியில் 4 போட்டிக்கோ அல்லது அதற்கு குறைவாக விளையாடினால் ஊக்கத்தொகை அளிக்கப்படாது. ஒருவேளை 50 சதவிகித டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக விளையாடினால், பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.30 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.
அதாவது 5 அல்லது 6 போட்டிகளில் விளையாடினால் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் மட்டுமே வழங்கப்படும். பிளேயிம்ங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால், அவருக்கு ரூ.15 லட்சம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படும். அதேபோல் ஒரு சீசனில் 75 சதவிகித டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடினால், ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஊதியமாக ரூ.45 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்றால் ரூ.22.5 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

இது 2022-23 சீசன் முதலே நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் ரஹானே, புஜாரா உள்ளிட்ட வீரர்களும் பயனடைவார்கள். அதேபோல் இந்த திட்டத்தால் இளம் வீரர்கள் பலரும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள். பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் சேர்த்து ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதன் மூலம் வரும் நாட்களில் ஐபிஎல் ஒப்பந்தம் இல்லையென்றாலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் சூழல் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி ஒரு சீசனில் குறைந்தபட்சம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.