இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகி இருக்கின்றார். இந்த சூழலில் பென் ஸ்டோக்ஸ் அணியுடன் தான் ஐந்தாவது டெஸ்டில் தனது நேரத்தை செலவிடுவார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ஸ்டோக்ஸ் தமக்கு காயம் ஏற்பட்டு இருப்பதற்கு அட்டவணை தான் காரணம் என்று குற்றச்சாட்டி இருக்கின்றார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடரை என்னால் முடிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கின்றது.

என்னுடைய தசைகளில் சிதைவு ஏற்பட்டிருக்கின்றது. அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று இன்னும் எனக்கு தெரியவில்லை. இந்த தொடர் முடிவடைந்து போனால் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். ஐந்தாவது டெஸ்டில் அணியுடன் இருக்க நான் முடிவெடுத்து இருக்கின்றேன். ஒரு டெஸ்ட்டுக்கும் இன்னொரு டெஸ்ட்டுக்கும் இடையே சரியான நாட்கள் ஓய்வுக்காக தரப்படவில்லை.
உதாரணத்திற்கு மூன்றாவது டெஸ்ட்டுக்கும் நான்காவது டெஸ்ட் க்கும் இடையே ஒன்பது நாட்கள் ஓய்வு இருந்தது. அது தேவையற்றது. அதற்கு பதில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு கொடுத்திருக்கலாம். இதே போல் ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும், நான்கு ஐந்து நாட்கள் ஓய்வு கொடுத்திருந்தால் அது எங்களுக்கு நிச்சயம் பலன் அளித்து இருக்கும்.
தற்போது இரு அணிகளுமே அட்டவணையில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்கள் நாங்கள் பந்து வீசுகிறோம். களத்தில் அதிக நேரம் செலவிடுகின்றோம். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு டெஸ்ட்டுக்கும் நான்கு ஐந்து நாட்கள் கண்டிப்பாக இடைவேளை வேண்டும்.
இப்படி நான்கு ஐந்து நாட்கள் இடைவேளை கொடுத்திருந்தால் தற்போது இருக்கும் அதே கால அளவு தான் அதற்கும் ஆகியிருக்கும். எனவே இந்த மாற்றத்தை இனி வரும் தொடர்களில் செய்வார்கள் என நம்புகிறேன். லண்டன் ஓவல் ஆடுகளத்தில் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான் அதிக விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். இந்தத் தொடர் ஒரு நல்ல பொழுதுபோக்கை கொடுத்திருக்கின்றது என்று கூறியுள்ளார்.