தரம்சாலா : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் பந்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போல்டாகி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்திருந்தது. இதனை தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக பேட்டிங் செய்தது. சிறப்பாக ஆடிய இருவரும் இங்கிலாந்து பவுலர்களை பொளந்து கட்டினர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. முதல் செஷனிலேயே சிக்சரும், பவுண்டரியுமாய் வீசிய இருவரும் இந்திய அணியை எளிதாக முன்னிலை பெறும் நிலைக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாச, மறுபுறம் சுப்மன் கில் தனது 4வது சதத்தை விளாசினார்.
இதனால் முதல் செஷனில் மட்டும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்களை குவித்தது. இதையடுத்து 2வது நாளின் 2வது செஷனில் இங்கிலாந்து அணி வீரர்கள் புதிய திட்டத்துடன் களமிறங்கினார்கள். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசிய நிலையில், 2வது ஓவரை வீச பென் ஸ்டோக்ஸ் வந்தார். காயத்திற்கு பின் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யாமல் நீண்ட மாதங்களாக தவிர்த்து வந்தார்.
இடதுகாலில் ஏற்பட்ட காயத்தால் ஆஷஸ் தொடரில் கூட பவுலிங் செய்யவில்லை. இருப்பினும் 5வது டெஸ்டுக்கு பின்பாக பென் ஸ்டோக்ஸ் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸை எதிர்கொள்ள ரோகித் சர்மா தயாராகினர். அவர் வீசிய முதல் பந்திலேயே ரோகித் சர்மா 162 பந்துகளில் 3 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 103 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.