சென்னை: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் செயல்பாடுகளை இந்திய அணியின் ரசிகர்கள் சில்லறைத்தனம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் பேஸ்பால் ஆட்டம், இப்போது Beg பால் ஆட்டமாக சரிந்துவிட்டதாக கிண்டல் செய்யும் ரசிகர்கள், இங்கிலாந்து வீரர்களின் தலைக்கணத்திற்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி டிரா செய்திருக்கிறது. 4வது நாளில் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கையுடன் இருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ஆட்டத்தால் சோகமடைந்தார். ஒரு கட்டத்தில் விரக்தியை முகத்திலேயே வெளிக்காட்ட தொடங்கினார் பென் ஸ்டோக்ஸ்.

ஒரு கட்டத்தில் கடைசி 15 ஓவர்களுக்கு ஆட்டம் சுருங்கியது. இங்கிலாந்து அணியின் முன்னணி பவுலர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 250க்கும் அதிகமான ஓவர்களை வீசியதால், பென் ஸ்டோக்ஸ்-க்கு என்ன செய்வதென தெரியவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டி இன்னும் 3 நாட்களில் தொடங்குவதால், பவுலர்கள் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்குவதையும் பொறுக்க முடியவில்லை. அவர்கள் சதமடித்தால் சொந்த மண்ணில் கூடுதல் அசிங்கம் என்பதால், டிராவில் முடிப்போம் என்று கெஞ்சியதோடு, அவரின் கோரிக்கையை இந்திய அணி ஏற்கவில்லை என்ற போது வார்த்தை மோதல்களிலும் ஈடுபட்டார். அங்கேதான் பென் ஸ்டோக்ஸின் திமிர் வெளியில் வந்தது.
ஹாரி ப்ரூக், பென் டக்கெட்டை அடித்து நீங்கள் சதமடித்தே ஆக வேண்டுமா என்று கேட்டது தான் உச்சக்கட்ட திமிர். 2 நாட்களாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் ஆர்ச்சர், வோக்ஸ், டவ்சன், ஜோ ரூட், கார்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகிய 6 பவுலர்களும் திண்டாடினார்கள். அவர்களை எதிர்த்து ஜடேஜா 90 ரன்களை விளாசிவிட்டார்.
ஆனால் ஹாரி ப்ரூக்கை எதிர்த்து சதமடிக்க வேண்டுமா என்று ஸ்டோக்ஸ் கேட்டதன் மூலமாக, சொந்த காசில் சூனியத்தை வைத்து கொண்டார். அவரை திமிரை அடக்க வேண்டும் என்பதற்காகவே ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் சதமடிக்க இந்திய அணி அனுமதித்தது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பேஸ்பால் இப்போது Beg Ballஆக மாறிவிட்டது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் கடைந்தெடுத்த சில்லறைத்தனமான செயல் இது என்றும் விளாசி வருகிறார்கள். பேஸ்பால் என்று 4 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி ஏற்றி வைத்த ஒட்டுமொத்த பில்டப்பும் சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் சுக்குநூறாக இந்திய அணி உடைத்துவிட்டது என்றும் பென் ஸ்டோக்ஸை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.