லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் நேரில் தனது அரண்மனைக்கு அழைத்து உரையாடிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதே போன்று இந்திய மகளிர் அணி டி20 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த சூழலில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டி முடிவடைந்த உடன் இந்திய அணி வீரர்களை கிங் மூன்றாம் சார்லஸ் நேரில் அழைத்து இருக்கின்றார். இதை அடுத்து இந்திய வீரர்கள் லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்திய வீரர்கள் ஒருவருடனும் அரசர் சார்லஸ் பேசி உரையாடினார்.
அப்போது இந்திய வீரர் ஆகாஷ் தீப்பின் தங்கைக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த அரசர் சார்லஸ் அவரை சந்தித்து உங்களது தங்கைக்கு எவ்வாறு இருக்கின்றது. இப்போது எப்படி இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். சார்லஸின் இந்த பேச்சு இந்திய வீரர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கின்றது.
இதேபோன்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லாவிடம் அருண் ஜெட்லி எவ்வாறு இருக்கிறார் என கேட்டிருக்கிறார். அதற்கு அருண் ஜெட்லி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக ராஜீவ் சுக்லா குறிப்பிட அதைக் கேட்டு வருத்தப்பட்ட கிங் சார்லஸ் அருண் ஜெட்லி குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதைப் போன்று லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை தான் கண்டுக்களித்ததாகவும், கடைசி நேரத்தில் ஜடேஜா உடன் ஒரு பேட்டர் இருந்திருந்தால் நிச்சயம் நீங்கள் வெற்றி பெற்று இருப்பீர்கள் என்றும் அரசர் சார்லஸ் கூறியதாக ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் கிங் சார்லஸ்க்கு கிரிக்கெட் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தெரிந்திருப்பதை பார்த்து தமக்கு ஆச்சரியம் ஏற்பட்டதாகவும் சுக்லா கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகளுடன் இணைந்து கிங் மூன்றாம் சார்லஸ் குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.