அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தொடர் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியாவுக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக முடிந்தது.
டி20 தொடரில் 4க்கு ஒன்று என்றும் ஒரு நாள் தொடரில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி எளிதில் வீழ்த்தி இருக்கிறது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி நல்ல உத்வேகத்துடன் இருக்கிறது.

இங்கிலாந்து அணி தேவையில்லாமல் அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், தங்களது அணுகு முறையில் தவறில்லை என்றும் சிறந்த ஒரு அணியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், இந்த ஒட்டுமொத்த தொடரும் ஒரே மாதிரி தான் இருந்தது. நாங்கள் ஆட்டத்தின் சில பகுதிகளில் எதிரணியை மிரட்டும் வகையில் செயல்பட்டோம். ஆனால் ஒரு சிறந்த அணியால் நாங்கள்தோற்கடிக்கப்பட்டிருக்கின்றோம். எங்கள் அணுகுமுறை சரிதான். அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருக்கிறது என நினைக்கின்றேன். எங்கள் அதிரடி அணுகுமுறையை சரியாக எப்படி செயல்படுத்துவது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான வழியை நாங்கள் தேடுகின்றோம். இன்றைய ஆட்டத்தில் கூட இந்திய வீரர்கள் பெரிய இலக்கை நிர்ணயித்து எங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.
அந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் நாங்களும் நன்றாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியும். அதே போல் நாங்களும் நல்ல தொடக்கத்தை பெற்றோம். எனினும் அதன் பிறகு கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது வாடிக்கையாக மாறிவிட்டது. நாங்கள் அதிரடியாக விளையாடுவதை களத்தில் நின்று அதிக நேரம் செய்ய வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் ஒரு நல்ல அணிக்கு எதிராக சண்டையிட்டு தான் தோல்வியை தழுவினோம். இந்திய அணி எங்களுக்கு பல சவால்களை கொடுத்தது என்று கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.