தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடக்கும் தரம்சாலா மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் பற்றி பார்க்கலாம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதுவரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. பேஸ் பால் அணுகுமுறையில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இதனால் 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்புடன் இங்கிலாந்து அணி தீவிரமாக உள்ளது. ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் தட்ப வெட்ப சூழல், இங்கிலாந்தின் தட்ப வெட்ப சூழலை போல் அமைந்துள்ளது. மலைகளுக்கு கீழ் மைதானம் அமைந்துள்ளதால் அதிகளவிலான குளிர் எப்போதும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் 10 டிகிரிக்கும் கீழ் வெயில் அளவு சென்றது.
இதனால் தரம்சாலா மைதானத்தின் பிட்ச் எப்படி செயல்படும் என்று கணிக்க முடியாமல் இரு அணிகளும் திணறி வருகின்றனர். இதுவரை தரம்சாலா மைதானத்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், 3வது நாள் ஆட்டத்தில் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் உதவி செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 4 ஆகிய நாட்களிலும் வேகப்பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஏனென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றாலும், டி20 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என்றும், 5 ஒருநாள் போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி என்றும் இந்திய அணி திணறியுள்ளது. இதனால் இந்திய அணியில் பும்ராவின் பணியே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பவுலிங்கையே தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் ஸ்விங் செய்யக் கூடிய பவுலர்களுக்கு பிட்சில் உதவி கிடைத்தால், முதல் நாளின் 2 செஷன்களிலேயே முதல் பேட்டிங் செய்யும் அணியை ஆல் அவுட் செய்ய முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.