தரம்சாலா : இங்கிலாந்து அணியின் இளம் வீரர் டாம் ஹார்ட்லி பேட்டிங் செய்ய வரும் போது, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது 3வது நாள் ஆட்டத்தை இந்த போட்டி கடக்குமா என்ற இந்திய ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினார்கள்.

ஏனென்றால் இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டிக்கு பின் இங்கிலாந்து அணி 3 செஷன்கள் முழுதாக எந்த இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆடியதில்லை. அதற்கேற்ப 3வது நாளின் முதல் செஷனிலேயே பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இதன்பின் இந்திய அணியின் இளம் வீரர்கள் பலரும் இங்கிலாந்து வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய தொடங்கினார்கள்.
அதற்கு பேர்ஸ்டோவ் பேட்டிங் செய்த போது, சுப்மன் கில்லை வம்புக்கு இழுத்தார். இதனால் இந்திய அணியின் இளம் வீரர்களான சர்பராஸ் கான், சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரெல் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுக்க தொடங்கினார்கள். இவர்கள் மூவரும் விக்கெட் கீப்பர், ஸ்லிப் மற்றும் லெக் ஸ்லிப் திசையில் நின்றதால், இவர்களின் பேச்சுகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.
இந்த நிலையில் பென் ஃபோக்ஸ் ஆட்டமிழந்த பின் இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லி பேட்டிங் செய்ய களம் புகுந்தார். நேராக க்ரீஸிற்கு வந்த அவர், பேட்டிங் செய்ய தயாரானார். அப்போது துருவ் ஜுரெல், இங்கிலாந்து அணியில் நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன் வந்துவிட்டார் என்று கிண்டல் செய்தார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.
அறிமுக தொடரிலேயே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யும் அளவிற்கு இந்திய இளம் வீரர்கள் நம்பிக்கையுடன் களத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 டெஸ்ட் அனுபவம், 3 டெஸ்ட் அனுபவத்துடன் உள்ள துருவ் ஜுரெல், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் நம்பிக்கையுடன் களத்தில் விளையாடுவது அவர்கள் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.