மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான். தோனிக்கு பிறகு இந்திய அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக அணிக்குள் வந்த ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
இதேபோன்று டி20 கிரிக்கெட்டிலும் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி வந்தாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லை. எனினும் ரிஷப் பண்டிற்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் போதிய வாய்ப்பு தரப்படுவதில்லை என்பதுதான் உண்மையே.

இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட், 76 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ள பண்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெறும் 31 ஆட்டங்களில் தான் விளையாடி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவர் அடித்த ரன்கள் 871. இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடங்கும். ரிஷப் பண்டின் சராசரி 33 என்ற அளவில் இருக்கிறது. ரிஷப் பண்ட்க்கு விபத்து ஏற்பட்டு கிரிக்கெட்டில் பங்கேற்காத நிலையில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு ரன்களை சேர்த்தார்.
இதன் காரணமாக ராகுலுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் தற்போதைய அணியில் ஜடேஜா, அக்சர் பட்டேல் என இரண்டு இடது கை பவுலிங் ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் நடுவரிசையில் மூன்றாவதாக ஒரு இடது கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால் உண்மை காரணம் வேறு என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் தேவையில்லாமல் அதிரடியாக ஷாட் அடி ஆட்டம் இழந்தார். இதற்கு கம்பீர் எதிர்ப்பு தெரிவித்தார். சூழலுக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என அறிவுறுத்தினார். ஆனால் அதனை ரிஷப் பண்ட் கேட்கவில்லை. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் பண்ட், அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.
டி20 கிரிக்கெட் போல் பண்ட், விளையாடி 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதில் பண்ட் மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்து இருந்தால், அவர் பெரிய ஸ்கோர் அடித்திருக்கலாம். இந்த ஆட்டத்தை கம்பீர் கண்டித்து இருக்கிறார். ஆனால் இதனால் அதிருப்தி அடைந்த பண்ட், தமது இயல்பான ஆட்டத்தை பயிற்சியாளர் விளையாட அனுமதி அளிப்பதில்லை என்பது போல் பேசி விட்டார். இதனால் தான் தற்போது பண்ட் மீது கம்பீர் கோபத்தில் இருக்கிறார். இதன் காரணமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் பண்டை அணியில் சேர்க்க கம்பீர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் .