மான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 15 ஓவர்கள் வீசப்படவிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜாவிடம் வந்து டிராவில் முடித்துக் கொள்வோமா என்ற கேட்டது ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது. 311 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது.

அந்த நம்பிக்கையில் 4வது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி மண்ணை அள்ளி போட்டது. ஆனால் 5வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலிங்கை அட்டாக்கை இந்திய அணி தாங்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப முதல் செஷனிலேயே கேஎல் ராகுல் 90 ரன்களிலும், சுப்மன் கில் 103 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆட்டம் மொத்தமாக வாஷிங்டன் சுந்தர் - ஜடேஜா கைகளில் வந்து விழுந்தது.
இருவருமே ஆல்ரவுண்டர் என்பதால், இங்கிலாந்து அணி வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் இருவரும் விக்கெட்டை கொடுக்காமல் அசால்ட்டாக ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி முன்னிலை பெற்றது. இதனால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் நம்பிக்கையை இழந்தனர். ஜடேஜா அரைசதத்தை கடந்து அட்டாக் செய்ய, வாஷிங்டன் சுந்தர் எந்தவித சிக்கலும் இல்லாமல் தடுப்பாட்டத்த்இல் ஈடுபட்டார்.
வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் டிராவில் முடியப் போகிறது என்றால், கடைசி ஒரு மணி நேரம் விளையாடுவது இரு அணிகளின் விருப்பம் தான். அந்த வகையில் கடைசி 15 ஓவர்கள் இங்கிலாந்து வீச வேண்டிய சூழலில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிரா செய்து கொள்ளலாம் என்று ஜடேஜாவிடம் வந்து கேட்டார்.
ஆனால் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருமே சதத்தை நெருங்கினர். இதனால் மறுப்பு தெரிவிக்க, பென் ஸ்டோக்ஸ் வேறு வழியின்றி ஹாரி ப்ரூக்கை பவுலிங் செய்ய அழைத்தார். அவரும் ஜோ ரூட்டும் பவுலிங் செய்ய, இங்கிலாந்து அணியை இதுதான் உங்களின் பேஸ்பால் ஆட்டமா என்று கேள்வி எழுப்பி கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இந்திய அணிக்கு வைத்த பொறியில் இங்கிலாந்து அணியே சிக்கிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.