நாக்பூர் : இந்திய அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலாவது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் சொதப்பியது.
இதன் காரணமாக இந்திய அணி 68 பந்துகள் எஞ்சிய நிலையில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், "கொத்தாக நான்கு விக்கெட்டுகளை நடு வரிசையில் இழந்தது தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்".

இது குறித்து பேசிய அவர், "முதல் நாள் போட்டியில் வெற்றி பெறாதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் பவர் பிளேவில் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தோம். எங்கள் தொடக்க வீரர்கள் நல்ல முறையில் ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்".
"ஆனால் அதன் பிறகு நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது எரிச்சலை தருகின்றது. இந்த போட்டியில் மட்டும் நாங்கள் ஒரு 40, 50 ரன்கள் கூடுதலாக அடித்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம். இப்படி நாங்கள் விளையாட வேண்டும் என்று நினைக்கவே இல்லை. நாங்கள் எதிரணியை நெருக்கடிக்கு ஆளாக்கி விளையாட வேண்டும் என்று தான் நினைத்தோம்".
"எங்களுடைய பந்துவீச்சாளர்களும் நல்ல முறையில் செயல்பட்டார்கள். ஆரம்பத்தில் சொற்ப ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை நாங்கள் வீழ்த்தினோம். இதன் மூலம் போட்டி எங்கள் பக்கம் திரும்பியது. எனினும் அதன் பிறகு நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க வழியை கண்டுபிடித்து இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்".
"ஆனால் கில், ஸ்ரேயாஸ் ஆகியோர் நல்ல பாட்னாஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் இனி கொஞ்சம் அதிக நேரம் களத்தில் செலவிட்டு விளையாட வேண்டும் என நினைக்கின்றோம். இதை நாங்கள் பகுதி பகுதியாக செய்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த அணியாக இதை செய்யவில்லை. போட்டியின் போது உங்கள் பக்கம் காற்று அடித்தால் அதை சரியாக பயன்படுத்தி ஆட்டத்தை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.