லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகுத்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. ஆனால் இந்திய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அவர்களும் 387 ரன்கள் தான் எடுத்தார்கள். இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் எந்த அணியும் முன்னிலை பெறாமல் ஸ்கோர் சமனில் இருந்தது.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
ஆனால் வழக்கம் போல் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகியும் கருண் நாயர் 14 ரன்களிலும், கில் 6 ரன்களிலும் ஆகாஷ் தீப் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த சூழலில் 58 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 39 ரன்களிலும், ரிஷப் பந்த் ஒன்பது ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியாக இருந்த நிலையில் களத்தில் ஜடஜா மட்டும் தனி ஆளாக நின்று போராடினார். அவருக்கு முதலில் பும்ரா 54 பந்துகளை எதிர் கொண்டு ஐந்து ரன்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்தார். எனினும் அவர் ஆட்டம் இழந்தவுடன் சிராஜ் 30 பந்துகள் எதிர்கொண்டு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் ஆனார். தனி ஆளாக போராடிய ஜடேஜா 181 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் நடப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 4 அரை சதத்தை ஜடேஜா அடித்திருக்கின்றார். இதன் மூலம் இந்திய அணி 170 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிராஜ் ஜடேஜாவுக்கு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர் சோயிப் பஷீர் பந்தை தடுத்து நிறுத்திய போது அது உருண்டு கொண்டு ஸ்டெம்பில் பட்டு அவர் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியாவின் போராட்ட குணத்தை பாராட்டி இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் சிராஜ் மற்றும் ஜடஜாவை பாராட்டிவிட்டு சென்றார்.