லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமனில் இருந்தனர்.
இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இந்த தருணத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து இந்திய அணியும் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் யாருமே முன்னிலை பெறாத நிலையில், ஸ்கோர் சமனில் இருந்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலில் இருந்தே தடுமாறியது.
தொடக்க வீரர் பென்டக்கட் 12 ரன்களும், ஜாக் கிராலி 22 ரன்களிலும், ஆலி போப் நான்கு ரன்களிலும் ஹாரி புரூக் 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 87 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோரூட் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இந்திய அணிக்கு ஆபத்தாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்தினார்.
இதை போன்று இந்தியாவிற்கு கடந்த இரண்டு போட்டிகளாக மிகப்பெரிய தலைவலியாக இருந்த ஜெமிஸ்மித் எட்டு ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். மறுபுறம் பும்ரா தன்னுடைய மேஜிக் பந்து வீச்சால் கிறிஸ் வொக்ஸ், பிரைடன் கர்ஸ் ஆகியோரை சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க கடைசி விக்கெட்டான சோயுப் பஷீரை வாஷிங்டன் சுந்தர் போல்டாக்கினார்.
இதன்மூலம் இங்கிலாந்த அணி 192 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது. சிராஜ்,பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.