கட்டாக் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. கட்டாக்கில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனை அடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய பில் சால்ட் மற்றும் பென் டக்கட் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் எடுத்தது. பில் சால்ட் 26 ரன்களில் அறிமுக வீரராக களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய பென் டக்கட் 56 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து, மூன்றாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஹாரி புரூக் 52 பந்துகளின் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷித் ராணா பவுலிங்கில் ஆட்டமிழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 69 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதே போன்று கேப்டன் ஜாஸ் பட்லர் 34 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 41 ரன்களும் எடுக்க, பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
எனினும் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். முஹமது ஷமி ஹரிஷித் ராணா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.