கயானா: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் வியாழக்கிழமை பல பரிட்சை நடத்துகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு மழை பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்று விடும். இந்த சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும்தான் அரை இறுதியில் மோதின.

இதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இம்முறை அதே இந்திய அணியை தான் இங்கிலாந்து எதிர்கொள்ளப் போகிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாஸ் பட்லர், நாங்கள் பார்த்த இந்திய அணிக்கும் தற்போது விளையாடும் இந்திய அணிக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நாங்கள் கடந்த முறை விளையாடியது முற்றிலும் வேறு ஒரு இந்திய அணியாக இருந்தது. தற்போது ரோகித் சர்மா அணியை பிரமாதமாக வழி நடத்தி வருகிறார். அவர் ஆடிய ஆட்டங்களை பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்கள் முழு சுதந்திரத்துடன் விளையாடுகிறார்கள்.
தொடக்கம் முதலே அவர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். இதுபோன்று ரோகித் சர்மாவின் புல் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் ஆடும் திறன் எனக்கும் இருந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும். இதேபோன்று விராட் கோலி ஆடுவதை நான் பல ஆண்டுகளாக பார்த்திருக்கின்றேன்.அவருக்கு எதிராக விளையாடுவது நிச்சயம் கடும் சவாலை அளிக்கும்.
எப்போதுமே களத்தில் தான் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விராட் கோலி நினைப்பார். எனக்கு விராட் கோலி இடம் மிகவும் பிடித்த விஷயம், இத்தனை எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் எப்படி சிறப்பாக செயல்படுகிறார் என்பது தான். ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பையும் தன் தோளில் சுமந்து விராட் கோலி விளையாடுகிறார். ஆனால் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் அதனை ஒரு பெருமையாக நினைத்து கோலி செயல்படுகிறார் என்று ஜாஸ் பட்லர் பாராட்டினார்.