தரம்சாலா : இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் இளம் வீரர் ரஜத் பட்டிதர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற பின் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக போராட்டத்தை இங்கிலாந்து வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பேர்ஸ்டோவ் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இங்கிலாந்து அணிக்காக ஆடிய வீரர்களில் அனைத்து வடிவங்களிலும் சிறந்தவர் அவர் தான்.
100 டெஸ்டில் விளையாடியதன் மூலம் அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. அவர் குடும்பத்தினர் முன் 100வது டெஸ்ட் கேப்பை பெற்றது மகிழ்ச்சியாக அமைந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து ரோகித் சர்மா பேசுகையில், நாங்களும் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளோம். தற்போது அடுத்த உச்சத்திற்கு செல்ல வாய்ட்ப்பு கிடைத்துள்ளது. இந்த பிட்சில் கொஞ்சம் நல்ல பவுன்ஸ் இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் பேட்டிங் செய்வதற்கு சிறந்த பிட்ச் தான்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களில் அஸ்வினும் ஒருவர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் பெருமைமிகு தருணம். அவரின் மேஜிக் இந்த போட்டியில் இருக்கும் என்று நம்புகிறேன். ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு பும்ரா வந்துள்ளார். ரஜத் பட்டிதர் நேற்று மாலை பயிற்சியின் போது காயமடைந்ததால், தேவ்தத் படிக்கல் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.