லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வீரர்கள் நிர்ணயித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் அடித்து இருக்கின்றது.
இந்திய அணியால் வெறும் ஐந்து விக்கெட்டுகள் மட்டும்தான் எடுக்க முடிந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், எங்கள் அணியில் இருக்கும் பவுலர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்று கூறியுள்ளார்.

"நிதிஷ்குமார் ரெட்டி வெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். பிரசித் கிருஷ்ணா நான்கு டெஸ்டில் விளையாடி இருக்கின்றார். ஹர்சித் ராணா இரண்டு டெஸ்டில் விளையாடி உள்ளார். எனவே அவர்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். முன்பெல்லாம் நமது அணியில் நான்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரும் 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருந்தார்கள்."
"ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் விளையாடும் போது அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது ஒன்று. இது வெறும் ஆரம்ப காலகட்டம் தான். ஒரு போட்டிக்கு பின் நமது வீரர்களை நாம் தவறாக எண்ணினால், நம்மால் எப்படி ஒரு நல்ல வேகப்பந்துவீச்சு படையை உருவாக்க முடியும்."
"பும்ரா, சிராஜ் தவிர வேறு அனுபவம் வாய்ந்த வீரர்களும் தற்போது இல்லை. ஆனால் நிச்சயம் இந்த வீரர்களிடம் திறமை இருக்கின்றது. நாம் தொடர்ந்து இந்த இளம் வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஏனென்றால் இது இந்த ஒரு தொடரை வைத்து எடுக்கப்படும் முடிவு கிடையாது. இந்திய அணிக்கு எதிர்காலத்தில் அதிக போட்டிகளில் விளையாட கூடிய வேகப்பந்துவீச்சு படையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்."
"பும்ராவின் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் இன்னும் நிறைய கிரிக்கெட்டில் நாம் விளையாட இருக்கின்றோம். இதனால்தான் இந்த தொடருக்கு முன்பு பும்ரா வெறும் மூன்று போட்டியில் தான் விளையாடுவார் என்ற நாங்கள் முடிவு எடுத்தோம். தற்போது அவருடைய உடல் தகுதி எவ்வாறு இருக்கிறது என்பதை பார்த்து அதன் பிறகு தான் அடுத்த எந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும்."
"நம்மிடம் திறமை வாய்ந்த பவுலர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். அவர்கள் மீது நம்பிக்கை நாங்கள் வைப்போம். இந்த வீரர்களுக்கு அனுபவம் இல்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் மெருகேறி வருவார்கள். இந்த டெஸ்ட் போட்டியில் நாம் பார்த்தோம். முதல் நான்கு நாட்களில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலை இருந்தது. ஆனால் ஐந்தாவது நாளிலும் நம்மால் வெற்றி பெற்றிருக்க முடியும்.'
"எனவே எனக்கு என் அணி வீரர்கள் மீது நம்பிக்கையிருக்கின்றது. நிச்சயம் இந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். பிரசித் முக்கிய விக்கெட்டுகளை அவர் எடுத்துக் கொடுத்தார்.பிரசித் கிருஷ்ணா விடம் வித்தியாசமான திறன் இருக்கிறது என்பதால் தான் அவரை நாங்கள் தேர்வு செய்தோம். முதல் இன்னிங்சில் ஆடுகளத்தின் பவுன்சை அவர் பயன்படுத்தினார். நிச்சயம் அவருக்கு அனுபவம் கிடைக்கும் போது ஒரு நல்ல பவுலராக வருவார்."
"அதற்கான வேண்டிய அனைத்து தகுதியும் அவரிடம் இருக்கின்றது. சிட்னி டெஸ்ட் போட்டியிலும், லீட்ஸ் டெஸ்ட் போட்டியிலும் அதை அவர் நமக்கு காட்டி இருக்கின்றார். இதனால் தான் நான் சொல்கிறேன் இந்த வீரர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஜடேஜா நன்றாக பந்துவீசினார் என்பதால் சர்துல் தாக்கூரை குறைவாக பயன்படுத்தியிருக்கலாம்."