அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. டி20 தொடரை நான்குக்கு ஒன்று என்ற கணக்கிலும் ஒரு நாள் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது.இதன் மூலம் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.
இந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அதிரடியாக மாற்றப்பட்டு இருந்தது. குறிப்பாக அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் எல்லாம் பேட்டிங் வரிசையில் முன்பாக விளையாடினார்கள்.

இதற்கு காரணம் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பது போல் பேட்டிங் வரிசையை மாற்றி பயிற்சியாளர் கம்பீர் அமைத்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கம்பீர், இனி கிரிக்கெட் இப்படித்தான் விளையாடப்படும் என கூறியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், பல பேர் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இப்படித்தான் நாங்கள் இனி கிரிக்கெட் விளையாட போகிறோம். கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்பட வேண்டும். இனி பேட்டிங் ஆர்டர் படி தான் விளையாட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. சூழலுக்கு ஏற்ப யார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பேட்டிங் வரிசையில் நாம் மாற்றி அமைக்க வேண்டும்.
இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் களத்திற்கு வந்தால் சரியாக விளையாட முடியும் என்ற நிலை இருக்கும்போது, நாம் ஏன் அதை செய்யக்கூடாது. ஏன் பேட்டிங் வரிசையை தான் பின் தொடர வேண்டும் என்று நினைக்க வேண்டும். பேட்டிங் வரிசையில் எப்போதுமே டாப் ஐந்து இடத்தில் வலது கை பேட்ஸ்மேன்கள் தான் விளையாட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்.
நாங்கள் இனி நம்பர்ஸ்களை பார்க்க போவதில்லை. ஒரு வீரரின் சராசரி என்ன எவ்வளவு ரன்கள் அடித்திருக்கிறார் என்பதெல்லாம் பார்க்கப் போவதில்லை. யார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை பார்த்து தான் இனி பேட்டிங் வரிசையை அமைப்போம். அக்சர் பட்டேல் எங்களுக்கு அபார ஆட்டத்தை ஆடி இருக்கிறார். கடந்த இரண்டு போட்டியிலும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.ஆனால் சிலர் இவ்வாறு செய்யக்கூடாது என்று பேசுவார்கள். ஆனால் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இனி எதிர்காலத்தில் நாங்கள் இப்படிதான் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.