லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் இந்த போட்டிக்கு முன்பாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இந்த தருணத்தில் சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியை வெளியிட்டு இருந்தார். அதில் குடும்பத்தினர் வெளிநாட்டு தொடர்களுக்கு வரக்கூடாது என இந்திய அணி நிர்வாகம் போட்ட தடை தான் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இருந்திருந்தால் இன்னும் சாதனைகளை படைத்திருக்கலாம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார்.
அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கம்பீர், "குடும்பம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன ஒரு பெரிய பொறுப்பு இருக்கின்றது. இது ஒன்றும் விடுமுறைக்கான நேரம் அல்ல."
" நீங்கள் நாட்டுக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நாட்டில் கோடிக்கணக்கான பேர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கும் போது அதிலிருந்து ஒரு சிலர் மட்டும் தான் இந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய நாட்டுக்கு பெருமையை சேர்க்க மிகப்பெரிய வாய்ப்பு இது."
"நான் குடும்பத்தினர் வெளிநாட்டு தொடருக்கு வரக்கூடாது என்று தடையெல்லாம் விதிக்கவில்லை. குடும்பங்கள் நிச்சயம் ஒரு வீரர்களுக்கு தேவையான ஒன்று. ஆனால் உங்களுடைய முக்கிய கவனம் நாட்டை பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான். இதுதான் உங்களுக்கான மிகப்பெரிய பணி. அந்தக் குறிக்கோளை ஏற்றுக்கொண்டு அதற்காக நீங்கள் உங்களுடைய நேரத்தை செலவிட வேண்டும். மற்றவர்களுக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால் எனக்கு நமது குறிக்கோள் தான் மற்ற அனைத்தையும் விட முக்கியம்" என்று கம்பீர் கூறியுள்ளார்.