லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் 193 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய ஜடேஜா தனி ஆளாக நின்று 61 ரன்கள் சேர்த்தார்.

இந்த சூழலில் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல், இந்தியாவின் தோல்விக்கு கேப்டன் கில் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். இது குறித்துப் பேசிய அவர், "லாட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜடேஜாவை மிகவும் தாமதமாகப் பயன்படுத்தியது என்று நினைக்கிறேன்."
"இதனால் அவர் கீழ் வரிசை வீரர்களுடன் இணைந்து விளையாடினார். ஜடேஜா அதிரடியாக ஆடியிருக்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அதுபோல ஒரு சூழ்நிலையில் ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் ஜடேஜா செய்தார். கீழ் வரிசை வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சில் அவுட் ஆவதை ஜடேஜா தடுக்கும் விதமாக சிங்கிள்ஸ் எடுக்காமல் இருந்தார்."
"மேலும் அது போன்ற ஆடுகளத்தில் இப்படித்தான் விளையாடியிருக்க முடியும். உண்மை என்னவென்றால், ஜடேஜா மட்டும்தான் பேட்ஸ்மேனாக இருந்தார்.
அவருடைய பணி பந்தை லீவு செய்து சிங்கிள்ஸ் எடுப்பது மட்டும்தான். அவரால் கணக்கிட்டு மட்டும்தான் ரிஸ்க் எடுத்து இருக்க முடியும்."
"இந்த சூழலில் கேப்டன் கில் தான் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஜடேஜாவுக்கு சில செய்திகளை அனுப்பி இருக்க வேண்டும். இந்தப் பணியை உங்களால் மட்டும்தான் செய்ய முடியும். கீழ் வரிசை வீரர்களுடன் இணைந்து இந்த இலக்கை எட்டி விடுங்கள் என்று ஜடேஜாவிடம் செய்தி பரிமாற்றத்தைச் செய்திருக்க வேண்டும்."
" 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் இதுபோல் நெருக்கடியான சூழ்நிலையில் பேட்டிங் செய்தார். கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் அதுவும் ஒன்று என்று சொல்லலாம். அந்தப் போட்டியில் ஸ்டோக்ஸ் வெற்றி பெற்றிருந்தாலோ, தோல்வி பெற்றிருந்தாலோ அணி நிர்வாகம் அவருக்குத் துணையாக நின்றிருக்கும்."
"இது போன்ற சூழலில்தான் அவர் தன்னுடைய தலைமைப் பண்பைக் காட்டி இருக்க வேண்டும். இந்திய அணி உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, தங்களது செயலால் அவர் அதைச் செய்திருக்க வேண்டும் என்று கிரேக் சேப்பல் குற்றச்சாட்டி உள்ளார்.