லண்டன்: கிரிக்கெட் உலகின் இரண்டு முக்கிய அணிகளான இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், சினிமாக்களையும் மிஞ்சும் த்ரில், திருப்பங்கள், சோகம், சந்தோஷம் என அத்தனை உணர்வுகளையும் ரசிகர்களுக்கு அளித்து, இறுதியாக 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவதும், அடுத்த நொடியே மற்றொரு அணி மீண்டு வருவதுமாக இந்தத் தொடர் முழுவதும் அனல் பறந்தது. இங்கிலாந்து அணி 'பேஸ்பால்' அணுகுமுறையின் உச்சத்தையும், இந்திய அணியின் விடாப்பிடியான போராட்ட குணத்தையும் வெளிப்படுத்திய இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் என்ன நடந்தது? எப்படி ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமாக இருந்தது? என்ற முழுமையான அலசலை இங்கே காணலாம்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியே ஒரு ரன் திருவிழாவாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அபார சதங்களால், இந்திய அணி ஒரு கட்டத்தில் 430/3 என வலுவான நிலையில் இருந்தது. ஆனால், ஜோஷ் டங்-இன் வேகத்தில் கீழ் வரிசை சரிந்ததால், இந்தியா 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து, போப்-இன் சதம் மற்றும் ஹாரி ப்ரூக்-இன் 99 ரன்களால் 465 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்தாலும், மீண்டும் ஒரு கீழ் வரிசை சரிவு ஏற்பட்டது. 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்க வீரர் டக்கெட்-இன் சூறாவளி சதத்தால் எளிதாக வெற்றியை நோக்கிப் பயணித்தது. ரூட்-இன் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தது. 'பேஸ்பால்' ஆட்டத்தின் மூலம் இந்திய பந்துவீச்சை இங்கிலாந்து பந்தாடியது. முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் போட்டியின் தோல்விக்குப் பிறகு, கேப்டன் சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 'இளவரசன்' சுப்மன் கில், அந்த விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் என விளாசித் தள்ளினார். ஜடேஜா, ஜெய்ஸ்வால், பண்ட் ஆகியோரும் கைகொடுக்க, இந்தியா பெரிதாக ரன் குவித்தது.
பின்னர் இங்கிலாந்து அணி 83/5 எனத் தடுமாறியபோது, ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித்-இன் 303 ரன் பார்ட்னர்ஷிப் அவர்களை மீட்டது. இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப்-இன் மிரட்டலான பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர். இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்தத் தொடரின் மறக்க முடியாத அத்தியாயம் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேறியது. முதல் இன்னிங்ஸில் ரூட்-இன் சதத்திற்கு, ராகுல் சதத்தால் பதிலடி கொடுக்க, இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தரின் 4 விக்கெட் வேட்டையில் இங்கிலாந்து 192 ரன்களுக்குச் சுருண்டது. எளிய இலக்கை நோக்கிச் சென்ற இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் இந்தியா 112/8 என சரிந்து, தோல்வியின் விளிம்புக்குச் சென்றது.
அப்போது, தனி ஒருவனாகப் போராடிய ரவீந்திர ஜடேஜா, பின்வரிசை வீரர்களை வைத்துக்கொண்டு அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில், சிராஜ் தடுத்தாடிய பந்து துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பைத் தட்ட, இந்தியாவின் வெற்றி பறிபோனது. மட்டையின் மீது சிராஜ் சாய்ந்து நின்ற காட்சி, டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிக்க முடியாத சோக சித்திரங்களில் ஒன்றானது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2 - 1 என முன்னிலை பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 'டிரா' என்பது சில நேரங்களில் வெற்றிக்குச் சமமானது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற, இங்கிலாந்து ரன் மலையைக் குவித்தது. பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கிலும் சதம் விளாச, ரூட் 150 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து 669 ரன்கள் குவித்த நிலையில், இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால், இந்திய அணி தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. ராகுல் - கில் ஜோடியும், பின்னர் ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் ஜோடியும் காட்டிய அசாத்தியமான போராட்ட குணம், இங்கிலாந்தின் வெற்றிக் கனவைத் தடுத்து நிறுத்தியது. கில், ஜடேஜா, சுந்தர் ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். உடைந்த காலுடன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்தப் போட்டியின் முடிவில் காயத்தில் சிக்கியதால், இந்தியா பண்ட்டையும், இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ்-ஐயும் இழந்தது. போட்டி டிராவில் முடிந்தது.
நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2-1 என இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தது. ஓவல் டெஸ்ட்டில் வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. புற்கள் நிறைந்த ஆடுகளத்தில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் கருண் நாயர்-இன் அரைசதத்தால் 224 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தின் காஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து, முகமது சிராஜின் அனல் பறந்த பந்துவீச்சால் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால்-இன் சதம் மற்றும் சுந்தரின் அதிரடி அரைசதத்தால் இந்தியா 374 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கு கடினமாக இருந்தாலும் ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட்டின் சதங்களால், இங்கிலாந்து 301/3 என வெற்றியின் வாசலில் நின்றது.
நான்காம் நாள் மதியம் இந்திய பந்துவீச்சாளர்கள் சோர்ந்து போன நிலையில், சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் கடைசி 15 ஓவர்களின் போது திடீரென புயலாக மாறினர். யார்க்கர்கள், ஸ்விங் என மிரட்டிய இந்த ஜோடி, இங்கிலாந்தின் சரிவுக்கு வித்திட்டது. பின்னர் ஐந்தாம் நாளில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் 4 விக்கெட்களுடன் இருந்த இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தது.
கையில் காயத்துடன் ஒற்றைக் கையால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்தும் பலனில்லை. நம்ப முடியாத வகையில் மீண்டு வந்த இந்தியா, 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என சமன் செய்தது. சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.