லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கி இருக்கின்றது.
இந்த சூழலில் பும்ரா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றது எப்படி என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு கவலையை அளிக்கின்றது.

பும்ரா இதுவரை இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றார். பும்ரா, எப்போதும் போல் தான் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படி இருந்தும் ஏன் இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவி இருக்கின்றது. பும்ரா விளையாடியும், நீங்கள் எப்படி இரண்டு போட்டிகளில் தோற்றீர்கள்.
பும்ரா இருப்பதால் அது மற்ற பவுலர்களுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவதாக நான் கூறவில்லை. ஆனால் பும்ரா இல்லாமல் தான் மற்ற பவுலர்கள் நன்றாக பந்து வீசுகிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. நீங்கள் கடந்த ஆண்டிலிருந்து பாருங்கள். இந்த இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி இருக்கின்றது. இதன் மூலம் இந்திய அணி தங்களுடைய நம்பிக்கையை இழந்து விட்டதாக நான் நினைக்கின்றேன். சூழல் கடினமாகும் போது உங்களுக்கு நம்பிக்கைதான் தேவை. நிச்சயமாக இந்த தோல்வி இந்திய அணி வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்.
முதல் டெஸ்ட் போட்டியில் கேட்சை கோட்டை விட்டு தோற்றார்கள். ஆனால் இந்த போட்டியில் அவர்களுடைய தட்டில் வெற்றி காத்துக்கொண்டிருந்தது. இந்த இந்திய அணி வெற்றிக்கு மிகவும் தூரத்தில் எல்லாம் இல்லை. அருகில் தான் இருக்கின்றார்கள் என்று மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் ,நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களது பிளேயிங் லெவனை மாற்றக்கூடாது என்றும், இதே அணியை வைத்து தான் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார். நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் அதன் பிறகு ஐந்தாவது டெஸ்ட் பும்ரா விளையாடியும் அர்த்தம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.